பேய், பிசாசு, ஏலியன் = - TopicsExpress



          

பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள் அறிவியல் அல்குர் ஆன் வழியில் அறிவியல்……….. ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள் பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன் எனில் அலன்”, “உண்டு என்றால் அது உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள். இஸ்லாத்தை பொறுத்தவரையில் பேய், பிசாசு என்று ஒன்று இல்லை. இறந்தவர்கள் ஆவி பேயாக உலவும் என்ற கருத்து இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானது. ஆனால் மற்ற மதங்களில் பேய், பிசாசு உலா வர தாராள இடம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில், “வல்ல பூதம் வாலாஷ்டிக பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும், பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும், கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப் பேய்களும், பெண்களைத் தொடரும் ப்ருமராட்சதரும், அடியேனைக் கண்டால் அலறிக்கலங்கிட….” என்று வாசிக்கும் பேய்க் காப்பு “சஷ்டிக்கவசம்” உள்ளன. கடவுளாகிய இயேசு கிறிஸ்த்துவை பிசாசு 40 நாள் சோதித்ததாக பைபிள் கூறுகிறது. (மத்தேயு-4:1) இயேசு கிறிஸ்து பேயோட்டிய சம்பவத்தையும் பைபிளில் காணலாம். (மத்தேயு-12:24) இஸ்லாம் மட்டுமே,பேய்,பிசாசு இல்லவே இல்லை என்று உறுதியாக கூறுகிறது. படைத்த இறைவனுக்கு மட்டும் பயப்படுங்கள். படைப்பினங்கள் எதற்கும் பயப்படக் கூடாது என்பதே இஸ்லாம். மூட நம்பிக்கைகளுக்கு அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடமில்லை. ஆனாலும் மற்ற மதங்களில் உள்ள புரோகிதர்களை போல இஸ்லாம் மார்க்கத்திலும் மூட நம்பிக்கைகளை முல்லா புரோகிதர்கள் தம் சுய நலனுக்காக புகுத்தி விட்டதை மறுக்க முடியாது. இன்று உலகில் நடக்கும் சில அமானுசிய சம்பவங்கள், அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட செய்திகள் பேய் உண்டு என்று கூறுபவர்களுக்கு பெரிய ஆதாரமாக உள்ளது. இன்றும் கிராம உக்கிர குல தெய்வங்களான அய்யனார், முனி, காளி கோவில்களில் நடக்கும் பேயோட்டும் சடங்குகள். மற்றும் நாகூர், ஏர்வாடி தர்கா சமாதி, சர்ச்களில் பேய் ஓட்டும் நிகழ்ச்சிகள், பேய் நம்பிக்கையை பெரிதும் வளர்க்கின்றன. இன்றைய அறிவியல் உலகம் பேய், பிசாசு கதைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இவை வெறும் மூட நம்பிக்கையே என ஒதுக்கிவிட்டன. அதேசமயம் ஏலியன் என்று கூறப்படும் வேற்று கிரகவாசிகள், நம்மைப்போன்ற உயிரினம் இருக்க வேண்டும் என அறிவியல் உலகம் நம்புகிறது. கடந்த 40 ஆண்டு காலமாக ஏலியன்களை “SETI” (Search for extra-Terrestrial Intelligence) அறிவுப்பூர்வமாக ரேடியோ தொலைநோக்கி மூலம் தேடி வருகிறார்கள். மலக்கு, ஜின், மனிதன் இறைவனது பெரும் படைப்பில் மூன்று இனம் உள்ளது. முதலில் ஒளியால் (LIGHT) படைக்கப்பட்டவர்கள் மலக்குகள் (ANGELS), இரண்டாவது ஜின்கள் (JINN) இவை நெருப்புக்கொழுந்தின் (FIRE-Smokeless Flame, (Plasma) மூலம் படைக்கப்பட்டவர்கள். ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் எப்பொழுதும் இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவனுக்கு துதி செய்பவர்கள். அவனது கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள். நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் சுதந்திர சிந்தனையுடன் படைக்கப்பட்டார்கள். இறுதியில் களிமண்ணின் சத்தைக்கொண்டு படைக்கப்பட்ட மனிதனும் ஜின்களைப்போல பகுத்தறிவோடு படைக்கப்பட்டான். மனு, ஜின்களை படைத்த நோக்கத்தை அல்லாஹ் கூறுகிறான். “ஜின்களையும்,மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” -அல்குர்ஆன்.52:56. “களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்புக்கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்” -அல்குர்ஆன்.55:14,15. களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்பு சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலைக் (Plasma-Radiant energy) கொண்டுள்ளார்கள். பிளாஸ்மா நிலையில் ஜின்கள் உலகில் ஒவ்வொரு பொருளும் திட,திரவ,வாயு என மூன்று நிலைகளில் இருக்கின்றன. மூன்றாவது நிலையான வாயுவை உஷ்ணப்படுத்தும்போது அணு தனது எலக்ட்ரான்களை இழந்து நேர் மின்,எதிர் மின் அயனிகள் தனித்தனியாக பிரிந்து (Plasma) பிளாஸ்மாவாக மாறுகிறது. புகையற்ற நெருப்புக் கொழுந்தினால் (Smokeless Flame-Plasma) படைக்கப்பட்ட ஜின்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் இறைவனிடமிருந்து தூரமாக்கப்பட்டு ஷைத்தான்களாக, வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் நல்ல ஜின்களும் இருக்கின்றனர். இறுதிக்காலம் வரையிலும் இவர்களுக்கு சில சக்திகளை, ஆற்றலை இறைவன் கொடுத்துள்ளான். இதைக்கொண்டே கெட்ட ஜின்கள் (ஷைத்தான்) மனிதர்களை ஏமாற்றி வழி கெடுக்கின்றனர். மனிதர்களைப்போல் மூன்று நிலைகளில் (3 டைமேன்சன்) இல்லாமல் நான்காவது நிலையான பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல! ஏழு வானங்களில் தாழ்வான வானத்தில் நட்சத்திரத்தை படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த தாழ்வான வானம் வரை ஜின்கள் சென்று வர ஆற்றல் பெற்றுள்ளனர் என்பதை அல்குர்ஆன் மூலம் அறியலாம். “திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம். இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம். –அல் குர்ஆன். 67:5,41:12. இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக் காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள். உதாரணமாக நமது இதயத்தை நம் கண்ணால் காண முடியாது. உடலின் உள்ளே நெஞ்சில் இதயம் மறைக்கப்பட்டுள்ளது. ஜான் (இதயம்) என்ற சொல் வந்ததின் காரணம் இதுதான். ஜின்கள் வெப்பத்தால் படைக்கப்பட்டதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. மின்காந்த வெப்ப அலை வடிவில் உள்ளனர். (Electromagnetic-Plasma Radiant Energy) மேலும் ஜின்களால் மனிதர் உருவில் வர முடியும். மேலும் கருப்பு நாய்,யானை,பாம்பு போன்ற உருவில் வரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாலை இருள் சூழும் நேரங்களில் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம், அது ஜின்கள் வெளிவரும் நேரம் என நபி (ஸல்) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கது. காத்து,கருப்பு அடித்துவிடும் என நமது கிராமங்களில் கூறுவது அனைவரும் அறிந்ததே! இருள் சூழ்ந்த இரவு,கருப்பு நாய்,யானை,பன்றி போன்ற கருப்பு நிற பிராணி உருவங்களை ஜின்கள் தேர்வு செய்யக்காரணம் என்ன? நெருப்பு வெப்பத்தால் படைக்கப்பட்ட ஜின்கள் (Thermochromic aliens change colors at different temperature in the visible and invisible spectrum.) தங்களை மறைத்துக்கொள்வதற்கு (Camouflage) கருப்பு நிறத்தை தேர்வு செய்வது அறிவியல் ரீதியாக சரியானதே. சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு மட்டுமே உண்டு. மழைக் காலத்தில் கருப்புக் குடை பிடிப்பது சரியானது. ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை அனைவரும் அறிந்ததே. கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பெண்களின் பர்தா துணிகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணமும் இதுவே. சில சமயம் இரவு நேரங்களில் அமானுஷிய உருவங்களை (பேய்?) பார்ப்பவர்கள் அது கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் அந்த இடம் சில்லென குளிர்ச்சியுடனோ அல்லது அதிக வெப்பத்துடன் இருந்ததாகவோ குறிப்பிடுவார்கள். காரணம் இதுதான், வெப்ப தன்மையுள்ள ஜின்கள் வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் கருப்பு நிறத்தை (Adaptation) தெரிவு செய்து தங்களை மறைத்து கொள்கின்றன. ஜின்கள் மின்காந்த அமைப்புடைய (Electromagnetic) உடலைப் பெற்றவை. அவ்விடத்தில் உள்ள வெப்பத்தை அவை கிரகித்துக் கொள்வதால் அவ்விடம் குளிர்ந்து சில்லென்றிருக்கும். தன் உடம்பிலிருந்து அகச்சிவப்பு கதிர்களை (Infra-Red Rays) வெளியிடுவதால் அவ்விடம் திடீரென்று வெப்பமாகும். 1927 ல் சர்.பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்ட் என்பவர் ஒரு நூல் எழுதுகிறார். (”Life in Star ”by Sir.Fransis Younghusband-Published. John Murray-London.) “நட்சத்திரங்களில் உயிர்கள்”. இதில் நட்சத்திரங்களில் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே. 1980 ல் விஞ்ஞானிகள் (G.Feinberg & R.Shapiro) பெய்ன் பர்க், மற்றும் ஷாப்பிரோ ஒரு ஆய்வு நூல் எழுதுகிறார்கள் “Life Beyond Earth” பூமிக்கு அப்பால் உயிர்கள். (Published by William Morrow and co.Inc.New York-1980.) அதில் அவர்கள், நட்சத்திரம் மற்றும் நமது சூரியனின் பிளாஸ்மாக்களில் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் இவ்வுயிரினங்களுக்கு பிளாஸ்மா பீஸ்ட் (Plasma Beast) என்று பெயரிட்டனர். பூமியில் கார்பன் மற்றும் நீரின் இரசாயன மாற்றத்தால் வாழும் மனிதன் மற்றும் பல ஜீவ ராசிகள் இரசாயன உயிரிகளாக (Chemical Life) இருப்பது போல் சூரியனின் பிளாஸ்மா வெப்பத்தில் வாழும் ஜின்கள் இயற்பியல் உயிரினமாக (Physical life) இருக்கலாம். இவைகள் சூரியக் கதிர்களை சக்தியாக கிரகித்து (Radiant energy) செயல்படலாம். பிரபஞ்சத்தில் பிளாஸ்மா உயிர்கள் சூரிய வெப்பத்தில் உருவாகும் பிளாஸ்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ள தூசு (Cosmic Dust) உடன் சேர்ந்து மின்னூட்டம் பெற்று பூமியில் உள்ள DNA உயிர்கள் போன்று மாறுவதாக ஜெர்மனி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம் கூறுகிறது. Cஇதே ஆய்வை விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ( ISS- International Space Station) ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்தி பிளாஸ்மா உயிர் உருவாவதை கண்டு பிடித்தனர். இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. பிரபஞ்சத்தில் பிளாஸ்மா ஜின்கள் பூமியில், விளக்கு சுடர், பிளோரசன்ட், நியான் விளக்குகள் மற்றும் இடி மின்னலின்போதும் பிளாஸ்மா உருவாகிறது. விண்வெளி முழுவதும் 99% (Ionised Plasma) பிளாஸ்மாவே நிறைந்திருக்கிறது. நமது பிரபஞ்சம் 96% கரும் சக்தி,கரும் பிண்டம் (Dark Energy & Dark Matter) நிறைந்த இருள் வெளி. நெருப்புச் சுடரில் (பிளாஸ்மா) ஜின்கள் படைக்கப்பட்டு இருப்பதால், இதனை எளிதாக விளக்க, ஜின்கள் மிகச் சிறிதாக ஒடுங்கி சுருங்கி பிரமாண்ட உருவமாக விரிவடையும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும். அரபியர்கள் புகழ் பெற்ற “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்ற நூலை உலகிற்கு அளித்தனர். ஏலியன்களை தொடர்பு கொள்ள ரேடியோ அலை தொலை நோக்கி (Radio Telescope) மூலம் கடந்த ஐம்பது வருடங்களாக கடும் முயற்சி செய்தும் பலனில்லை இதுவரை பதிலில்லை. காரணம் ரேடியோ அலைகளால் ஏலியன்-ஜின்களை தொடர்பு கொள்ள முடியாது. ஏனெனில் ஜின்கள் எலெக்ட்ரோ மாக்னடிக் ரேடியன்ட் ஆற்றல் உள்ளவர்கள். கடும் பிளாஸ்மா வெப்பத்தில் படைக்கப்பட்டவர்கள். அகச் சிவப்பு கதிர்களை வெளியிடக்கூடியவர்கள். இந்த மாதம் ஜூன் 2013 ல் வெளிவந்த புகழ்பெற்ற “ASTRONOMY” இதழில் பிரபல்யமான ஐந்து விண்ணோக்கி ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவு வெளி வந்தது. கடந்த நாற்பது வருடமாக ரேடியோ டெலஸ்கோப் (Radio Telescope) மூலம் ஏலியன் என்னும் பிற உயிரினத்தை தேடி அலைந்து தோல்வியுற்றார்கள். காரணம் பிரபஞ்சத்தில் வெப்பத்தை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. (“The energy footprint of life and civilization appears as infrared heat radiation,” says Kuhn, the project’s lead scientist University of Hawaii’s Institute for Astronomy,.) எனவே வெப்பத்தை தேடும் (Heat Seeking) அகச் சிவப்பு கதிர் தொலைநோக்கி (Infra-Red Telescope) மூலம் இனி தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இந்த தொலை நோக்கி (The Colossus Telescope) ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு இன்னும் ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வருமாம். இறுதியில் அல்குர்ஆன் கூறும் ஜின்கள்(ஏலியன்) கடும் வெப்பமுடைய நெருப்பு கொழுந்து சுவாலையால் (பிளாஸ்மா) படைக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மேலை நாட்டு அறிவியல் உலகம் இன்று ஏற்றுக்கொண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்! “எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இவ்வேதமானது உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது விசுவாசம் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் விசுவாசம் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.” –அல்குர்ஆன். 22:54. அல்லாஹ் மிக அறிந்தவன். –எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.
Posted on: Sun, 01 Sep 2013 03:09:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015